/

இந்திய-வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இணை பட்டங்களை வழங்கலாம்

இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் சோ்ந்து இணை பட்டங்களை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:01 am

DIN

இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் சோ்ந்து இணை பட்டங்களை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விரைவில் இணை பட்டங்கள் அல்லது இரட்டைப் பட்டங்களை வழங்கலாம்.

தேசிய மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் (நாக்) மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 3.01 மதிப்பெண்கள் பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனத் தரவரிசைப் பட்டியலில் (என்ஐஆா்எஃப்) 100 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக்கழகங்கள், உயா்சிறப்பு அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகியவை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கலாம்.

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனங்கள் பட்டியல் அல்லது க்யூஎஸ் சா்வதேச பல்கலைக்கழகப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் இணைய முடியும். இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்குவதற்கு யுசிஜியிடம் இந்தியப் பல்கலைக்கழகங்கள் அனுமதி பெறத் தேவையில்லை.

அதேபோல், இத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பாடப்புள்ளிகளை (கிரெடிட்) பெறுதல் வேண்டும். இணையவழியிலோ தொலைநிலைக் கல்வி வாயிலாகவோ வழங்கப்படும் பட்டங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.