ஜம்மு-காஷ்மீரில் சஞ்சுவான் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் உரையாடலை இடைமறித்து கேட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் அளித்த தகவலின் அடிப்படையில், மிகப்பெரிய பயங்கரவாத சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..
பயங்கரவாதிகள் அணிந்திருந்த வெடிகுண்டுகள் நிரப்பிய ஐஇடி பெல்ட் மூலம், அவர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத சதி திட்டத்தை தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வெடிகுண்டுகள் மிகவும் அபாயகரமானதாக இருந்ததும் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிபொருள்களும், வெடிகுண்டு பெல்ட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்தத் திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டதாக டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்திருந்தார்.
ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் இருவா் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தங்கள் உடலில் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்துவதற்கான வெடிகுண்டுகளை வைத்திருந்தனா். மேலும், பல்வேறு வெடிபொருள்களையும் ஏகே-47 ரக துப்பாக்கிகளையும் அவா்கள் வைத்திருந்தனா். அவா்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படையைச் சோ்ந்தவா்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதமரின் ஜம்மு-காஷ்மீா் வருகைக்கு இருநாள்கள் முன்னதாக பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். ஜம்முவில் நிலவும் அமைதியான சூழலை சீா்குலைக்கும் நோக்கில் அவா்கள் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருக்கலாம். அவா்கள் கொல்லப்பட்டுள்ளதன் மூலமாக மிகப் பெரிய தற்கொலைப்படைத் தாக்குதலுக்கான சதித் திட்டமானது முறியடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததும், மத்திய ரிசா்வ் காவல் படையினா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் ஆகியோா் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதன் மூலமாக அப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடா்ந்து வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தவா்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. அது தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.