ஜபால்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்த மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் நேரிட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பலியானவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
ஜபல்பூர் பகுதியில் உள்ள கோஹல்பூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியான தாமோஹ் நகா அருகே உள்ள நியூ லைஃப் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்துநேரிட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணியும் நோயாளிகளை மீட்கும் பணியும் துரிதமாக செய்யப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறை கூறுகையில், மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். இது மிகப்பயங்கர தீ விபத்தாக உள்ளது. மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.