
தில்லி விமான நிலையத்தில் பாட்னாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் முன்பகுதியில் திடீரென கார் புகுந்ததால் விமானநிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தில்லி விமான நிலையத்தில் செல்வாய்க்கிழமை காலை பிகார் மாநிலம், பாட்னாவுக்கு செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாரானபோது, அங்கு வேகமாக வந்த கோர் ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்விஃப்ட் டிசையர் கார் ஒன்று விமானத்தின் நோஸ் வீல் எனப்படும் முன்பகுதிக்குள் புகுந்தது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த கார் விமானத்தின் முன் சக்கரத்தில் மோதவில்லை. விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை விமானத்தின் சக்கரங்களில் கார் மோதியிருந்தால் விபத்து நிகழ்ந்திருக்கூடும். எனினும், விமானம் திட்டமிட்ட நேரத்தில் பாட்னாவிற்கு புறப்பட்டு சென்றது.
மேலும், கார் ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர் மது அருந்தவில்லை என தெரியவந்தது. அவர் உடல் சோர்வு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.