கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நான்காவது நாளாக கனமழை பெய்து வரும் நிலையில், அதன் தீவிரம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 13-ஐ எட்டியுள்ளது.
மேலும் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையில் சிக்கி ஒரு சிலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் வெள்ளத்தால் 150 ஏக்கர் காய்கறி விவசாயம் முற்றிலும் நாசமானது. இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மலை மாவட்டமான இடுக்கியின் எல்லையான எர்ணாகுளம் நேரியமங்கலம் பகுதியில் அதிகபட்சமாக 173 செ.மீ., மழை பெய்துள்ளது.
புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த கேரள மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவும், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.