அமலாக்கத் துறை மற்றும் பிற விசாரணை முகமைகள் என் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை செவ்வாய்க்கிழமை முறித்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து மாநிலத்தில் மகா கூட்டணி அரசை அமைப்பதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அவா் கைகோர்த்து பிகாா் மாநில முதல்வராக எட்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்றாா். துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.
பதவியேற்பு நிகழ்வில் பாஜக தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேட்டி ஒன்றில் ‘அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரிச் சோதனை அதிகாரிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் என் வீட்டிற்கு வந்து அலுவலத்தை அமைத்து எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் தங்கலாம். திடீரென ஒருநாள் வந்து சோதனை செய்துவிட்டு பின் மீண்டும் 2 மாதம் கழித்து வருவதற்கு பதிலாக இது சரியாக இருக்கும். நிதீஷ்குமார் அனுபவம் வாய்ந்தவர். நரேந்திர மோடியால் பிரதமராக பணியாற்ற முடியுமென்றால், அவரால் முடியதா?’ எனக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பின்போது அமலாக்கத் துறையினர் சிவசேனையின் சஞ்சய் ரௌத் மற்றும் முக்கிய தலைவர்களின் வீடுகளில் தொடர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.