நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ரௌடி வீரமணியை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு வெட்டி கொலை செய்தனர்.
நெய்வேலி, வட்டம் 21-இல் வசித்து வந்தவர் ராமசாமி மகன் வீரமணி(43), பிரபல ரௌடி. இவருக்கு மனைவி செல்வி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது நெய்வேலி நகரியம், நெய்வேலி தெர்மல், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி என 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
நெய்வேலி, வட்டம் 30-இல் வீரமணியின் தாய் காளியம்மாள் வீடு உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு கட்டிலில் வீரமணி படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 12 மணி அளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் வீரமணியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். வீரமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது வீரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். போலீசார் வீரமணியின் சடலத்தை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் நெய்வேலியில பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.