அரசுப் பள்ளிகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள மணீஷ் சிசோடியாவுக்கு ‘பாரத ரத்னா விருது’ கொடுப்பதற்கு பதிலாக, அவரது வீட்டில் சிபிஐ சோதனை செய்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்றுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அரசுப் பள்ளிகளில் 70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்யாத சீர்திருத்தங்களை மணீஷ் சிசோடியா செய்துள்ளார். அதற்காக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கல்வித் துறையும் அவரிடம் அளித்திருக்க வேண்டும். ஆனால், சிபிஐ சோதனை செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் சுகாதார மையங்களை உருவாக்கி தரமான இலவச சிகிச்சை அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும், தேவைப்பட்டால் புதிதாக மருத்துவமனைகள் கட்டப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தில்லியில் கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாகத் தொடர்பாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிசோடியா வீடு உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.