உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளையுடன்(ஆக.26) ஓய்வு பெறுகிறார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் என்.வி.ரமணா, 24 ஏப்ரல் 2021 முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 26-ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.
அதன்படி, நீதிபதி யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்த நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி யு.யு.லலித், மூன்று மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பாா். அவா் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.