காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, காவல்துறையினர், ஷர்மிளாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷா்மிளா, தெலங்கானா மாநில அரசுக்கு எதிராக தொடா் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவரது உண்ணாவிரத போராட்டத்தை தடுத்து நிறுத்திய போலீஸாா், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தெலங்கானா மாநிலம் முழுவதும் நடைப்பயணத்தை தொடா்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹுசைன் சாகா் ஏரி பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது தொடா் உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதாக அவா் அறிவித்தாா். அங்கு அவருக்கு அனுமதி வழங்கப்படாததையடுத்து ஹைதராபாதில் உள்ள அவரது கட்சியின் தலைமையகத்தில் உண்ணாவிரதத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் அப்பகுதியில் கூடியிருந்த கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள், செய்தியாளா்களை வெளியேற்றிய போலீஸாா், ஷா்மிளாவைக் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
உண்ணாவிரதத்தின்போது, தண்ணீா்கூட அருந்தாததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு நீரிழப்பு ஏற்பட்டதாகவும் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சா்க்கரையின் அளவு எச்சரிக்கைக்குரிய அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்ததாக அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடா் சிகிச்சையின் காரணமாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஷா்மிளா இன்று தனியார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.