சபரிமலையில் 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலையில் கோயிலில் கடந்த 30 நாட்களில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார நாள்களிலும், அதைக்காட்டிலும் வார இறுதிகளிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இணையதளத்தில் 21,71,452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 19,38,452 பேர் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 30 நாள்களில் 19.38 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளனர். அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள்கள் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தைத் தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.