பக்தர்கள் வருகைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் திங்கள் கிழமை (டிச. 19) ஆன்லைன் தரிசனம் இல்லை என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், அன்றைய நாளில் முன்பதிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்பு முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் அன்றைய நாளில் தரிசனம் செய்ய அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 30 நாள்களில் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் வசதிக்காக இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் முறையும் கொண்டுவரப்பட்டது. இணையதள டிக்கெட்டிலும் ஒரு நாளுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்கின்றனர்.
இதனால், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கேரள மாநில காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு நாளுக்கு 90,0000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியாது என தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.