கொல்கத்தாவில் மேற்கு வங்க செயலகத்தில் இன்று நடைபெற உள்ள கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்க உள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
ஐந்து மாநிலங்களின் எல்லைகள் மற்றும் கிழக்கு சரக்கு வழித்தடத்தை நிறைவுசெய்வது தொடர்பான விஷயங்கள் குறித்து அமித்ஷா விவாதம் நடத்த உள்ளார்.
முதல்வர்களுடன், அனைத்து மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நவம்பர் 5-ஆம் தேதி இக்கூட்டம் திட்டமிடப்பட்டது. ஆனால், அமித்ஷா மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், இது ஒத்திவைக்கப்பட்டது.
மாநில செயலகம் மற்றும் நகரிலுள்ள பாஜக அலுவலகத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்படடுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமித்ஷா முன்னதாக வெள்ளியன்று மாலை கட்சியின் வங்காளப் பிரிவின் உறுப்பினர்களுடன் கூட்டத்தை நடத்தினார். அதில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.
மேலும், மேற்கு வங்காளத்திலும் நடைபெற உள்ள பஞ்சாயத்துத் தேர்தலுக்கான பாஜகவின் ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார் என்று குறிப்பிடத்தக்கது.