இந்திய ராணுவம் பலமானது, ஆனால் அரசு பலவீனமானது என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.
இந்திய - சீன எல்லையான அருணாசலப் பிரதேச தவாங் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஓவைசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அசாதுதீன் ஓவைசி, ''நாட்டின் ராணுவம் பலம் மிக்கது. ஆனால், அரசு மிகவும் பலவீனமானது. அதனால் சீனாவிற்கு பயப்படுகிறது. அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பாரதிய ஜனதா, அரசியல் தலைமை ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஆதரவளிக்கும்'' எனக் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய - சீன தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.