பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் கூட்டங்களுக்கு கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு கடிதம் எழுத வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் ஒற்றுமைப் பயணத்தில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு மன்சுக் மாண்டவிய கடிதம் எழுதிய நிலையில், காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தை முன்னெடுத்து வருகிறார். தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தானில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒற்றுமை நடைப்பயணத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்ஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேரணியில் கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை. அதனால், பிரதமருக்குத்தான் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுத வேண்டும். அமைச்சருக்கு அரசியல் உள்நோக்கம் இல்லையென்றால், முதலில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.