மூக்கு வழியாக கரோனா தடுப்பு மருந்து செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் கரோனா தடுப்பூசி திட்டத்தில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தும் இன்று முதல் சேர்க்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்து
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசிகளைத் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்து செலுத்த அரசு அனுமதித்துள்ளது.
முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியே கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய வகை கரோனா
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவரும், ஒடிசாவில் ஒருவருக்கும் புதிய வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம், அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேட்டுக்கொண்டார்.