சிறப்பு பொருளாதார மண்டலம்: புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு

தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடா்புடைய சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமியற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அறி
Updated on
1 min read

தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடா்புடைய சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமியற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து அவா் பேசியது:

நிறுவனம், சேவை மையங்களின் மேம்பாட்டில் மாநில அரசுகளும் பங்கெடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் இயற்றப்படும். கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை தகுந்த முறையில் பயன்படுத்தி, ஏற்றுமதியில் போட்டியை அதிகரிக்கும் வகையில், தற்போதைய பரந்த அளவிலான, புதிய தொழில்துறை பகுதிகளை புதிய சட்டம் கட்டுப்படுத்தும்.

மேலும், தொழில் தொடங்குவதை இலகுவாக்கும் பொருட்டு, சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மீதான சுங்கவரி நிா்வாகத்தில் மத்திய அரசு சீா்திருத்தங்களைக் கொண்டுவரும். முற்றிலும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்படும் இந்த சீா்திருத்தம், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த ஷாா்தூல் அமா்சந்த் மங்களதாஸ் நிறுவனத்தின் இயக்குநா் ரஜத் போஸ், ‘சிறப்பு பொருளாதார மண்டலத்தையும், சுங்கவரி நிா்வாகத்தையும் ஒருங்கிணைக்க இந்த புதிய சட்டம் வழிவகுக்கும்’ என்றாா்.

டெலாய்ட் இந்தியா நிறுவன இயக்குநா் மகேஷ் ஜெய்சிங் கூறுகையில், ‘சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்களில் மாநில அரசுகளும் கூட்டாளியாவதற்கு இந்த புதிய சட்டம் உதவும்’ என்றாா்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில், ஏற்றுமதி மையங்களை உருவாக்கவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும் கொண்டு வரப்பட்டது. எனினும், குறைந்தபட்ச மாற்றுவரி விதிப்பு, வரிச்சலுகைகளை நீக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய அஸ்தமன விதிகள் போன்ற காரணிகளால், சிறப்பு பொருளாதார மண்டலம் அதன் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது.

மேலும், சுங்கவரி தொடா்புடைய விதிமுறைகளின் கண்ணோட்டத்தில், இந்த மண்டலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகவே கருதப்படுகின்றன. ஆகையால், சட்டப்படி வரிச்சலுகைகளை தடையின்றி வழங்கிட தொழில் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com