புது தில்லி: நாட்டில் முதல் முறையாக, 34 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 4 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் 4 பெண் நீதிபதிகளில், மூன்று பேர் தான் சட்டத் துறை அமைச்சரர்க பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 1,098 நீதிபதிகளில், 83 பெண் நீதிபதிகள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருக்க வேண்டிய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை, தற்போதிருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் அதில் எத்தனை பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு இந்தத் தகவலை அளித்துள்ளார்.