வாழ்வும் மரணமும் மருத்துவமனையிலேயே; காஷ்மீர் பெண்ணின் கண்ணீர் கதை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் மரணம், அந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கலங்க வைத்துவிட்டது. 
வாழ்வும் மரணமும் மருத்துவமனையிலேயே; காஷ்மீர் பெண்ணின் கண்ணீர் கதை
வாழ்வும் மரணமும் மருத்துவமனையிலேயே; காஷ்மீர் பெண்ணின் கண்ணீர் கதை
Updated on
1 min read


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் மரணம், அந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கலங்க வைத்துவிட்டது. 

அவரது இறுதிச் சடங்கை மருத்துவமனையிலேயே செய்து, தங்களது குடும்பத்தில் ஒருவர் இறந்தது போல, அனைவரும் கண்ணீர்விட்டு அழுதது காண்போரின் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டில், காஷ்மீரை விட்டு காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் இடம்பெயர்ந்தபோது, தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாத நிலையில், மனநிலை பாதித்த பெண்ணை காஷ்மீரில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுச் சென்றது அவளது குடும்பம்.

"சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பெண் இந்த மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டிருந்தார்" என்கிறார் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை தலைவர் பேராசிரியர் மக்பூல் அகமது தார்.

அப்பெண்ணின் தாயார் எப்போதாவது ஒரு முறை வந்து தனது மகளைப் பார்த்துவிட்டுச் செல்வார். இங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பைப் பார்த்த அவர், மகளை தன்னுடன் அழைத்துச் செல்வது பற்றி இதுவரை சிந்திக்கக்கூட இல்லை என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

கடந்த செவ்வாயன்று, திடிரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சையளித்தும், அவர் மீளாமல், மரணத்தைத் தழுவினார். உடனடியாக ஸ்ரீநகரில் வசித்து வரும் அவரது சகோதரிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அப்பெண்ணின் இறுதிச் சடங்குகள், இந்து முறைப்படி மருத்துவமனையிலேயே செய்யப்பட்டது. மருத்துவமனையிலேயே, அவரது உடலை சுத்தம் செய்து, புத்தாடை அணிவித்து, மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது ஒரு சில உறவினர்களுடன், மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும், மயானம் வரை சென்று, தங்களது குடும்பத்தில் ஒருவரின் இறுதிச் சடங்குகளை எவ்வாறு செய்வார்களோ,  அதுபோல அனைத்தையும் செய்து முடித்தனர்.

எங்களது மருத்துவமனையில், எத்தனையோ நோயாளிகள் மரணமடைவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். இது எங்களது தொழிலில் ஒரு அங்கமும் கூட. ஆனால், இவரது மரணத்தைத் தாங்கிக் கொள்ளவோ, கண்ணீரை நிறுத்தவோ முடியவேயில்லை என்கிறார் மற்றொரு மருத்துவர்.

அவருக்கு மனநல பாதிப்பு இருந்த போதும், ஒவ்வொரு மருத்துவரும், அவரை பெயரிட்டுத்தான் அழைப்போம். அதுபோல, ஒவ்வொரு மருத்துவரின் பெயரையும் அவரும் அறிந்திருந்தார். அவர்களை அந்தப் பெயரால் அவர் அழைப்பதுதான் வழக்கம்.

ஒரு நோயாளியின் இறுதிச் சடங்கில், தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்தது போல மருத்துவர்கள் முதல் ஊழியர்கள் வரை கண்ணீர்விட்டது காண்போரை கண்கலங்க வைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com