/

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கும் சட்டம்: தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வழக்குகள் பதிவாகவில்லை

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:03 pm

DIN

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி எழுத்துபூா்வமாக பதில் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்பட குற்றங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிடுகிறது. அதன் வெளியீடான ‘கிரைம் இன் இந்தியா’ தேசிய குற்ற ஆவணக் காப்பக இணையதளத்தில் கிடைக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 3,71,503 ஆகும். இவற்றில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 496 ஆகும்.

மருத்துவ உதவி, காவல் வசதி, சட்ட ஆலோசனை, உளவியல்-சமூக ஆலோசனை மற்றும் தற்காலிக தங்குமிடம் போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒற்றை அணுகல் மைய திட்டத்தை, ஏப்ரல் 1, 2015 முதல் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் செயல்படுத்துகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பல்வேறு இதரத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020 வரை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.