புது தில்லி: எம்பிபிஎஸ் படித்த கண் பார்வையற்ற மாணவர், எம்.டி. மனநல மருத்துவர் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்திருக்கும் இடைக்கால உத்தரவினால், மனுதாரருக்கு மும்பையில் உள்ள தோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் எம்.டி. மனநல மருத்துவம் பயில ஒதுக்கப்பட்டிருக்கும் தற்காலிக இருக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. புதிதாகப் போட்ட தார்ச் சாலையில் புல் முளைக்குமா?
இது குறித்து நீதிமன்ற உத்தரவில், இறுதி உத்தரவு வரும் வரை, மும்பையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கண்பார்வையற்ற மாணவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சேர்க்கை இடத்தை எந்த வகையிலும் இடையூறு செய்ய வேண்டாம், அவர் நடைபெற்றுவரும் கலந்தாயவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் - முதுநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வெழுதிய தேர்ச்சி பெற்றுள்ள 100 சதவீதம் கண்பார்வையில்லாத எம்பிபிஎஸ் படித்த இளம் மருத்துவரான ஐயர் சீதாராமன் வேணுகோபாலன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவை அளித்துள்ளனர்.
நீட் - முதுகலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த மாணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.