/

உக்ரைன்: இந்திய மாணவர்களுடன் தில்லி வந்தடைந்தது மூன்றாவது விமானம்

உக்ரைனில் சிக்கியிருந்த 240 இந்திய மாணவர்களுடன் ஹங்கேரியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் மூன்றாவது சிறப்பு விமானம் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானம் வந்தடைந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :27 பிப்ரவரி 2022, 4:39 am

DIN


உக்ரைனில் சிக்கியிருந்த 240 இந்திய மாணவர்களுடன் ஹங்கேரியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் மூன்றாவது சிறப்பு விமானம் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானம் வந்தடைந்தது.

உக்ரைன் மீது ரஷியா கடும் ராணுவத் தாக்குதலை நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழலும் நிலையற்றத் தன்மையும் நிலவுகிறது. தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற ரஷியா முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் படையினர் அதை முறியடித்து வருகின்றனர்.

இந்தப் போரில் உக்ரைனிலுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டது. சாலை மார்க்கமாக அருகிலுள்ள நாடுகளின் எல்லையை அடைந்தபின், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

முதல் விமானத்தில் 219 மாணவர்கள் சனிக்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தனர். இரண்டாவது விமானத்தில் 250 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தியா வந்தடைந்தனர்.

இந்த வரிசையில் தற்போது ஹங்கேரியிலிருந்து வந்துள்ள மூன்றாவது விமானத்தில் 240 இந்திய மாணவர்கள் வந்துள்ளனர். விமான நிலையத்தில் வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் வெளியே அனுப்பப்படவுள்ளனர். அவர்களை வரவேற்க சில பெற்றோர்கள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். விமான நிலையத்திலிருந்து வீடு செல்வதற்கு உதவ மாநில அரசுகளால் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவி ஒருவரின் பெற்றோர் கூறியதாவது:

"பேருந்துகள் மற்றும் விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எங்களிடம் ஒரு ரூபாய்கூட கேட்கவில்லை. போர் தொடங்கியபோது, உக்ரைனின் மேற்கு பகுதியில் எனது மகள் இருந்தாள். அவள் தற்போது இந்தியா வந்தடைந்துவிட்டாள். நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.