ஹரியாணா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக 5 மாவட்டங்களில் இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் குருகிராம், ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்குலா மற்றும் சோனிபட் ஆகிய மாவட்டங்களில் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் ஹரியாணாவில் குருகிராம், ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்குலா மற்றும் சோனிபட் ஆகிய ஐந்து நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களில் கரோனா தொற்று அதிகமாக உள்ளதால், ஜனவரி 12-ஆம் தேதி வரை இந்த பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில்கொண்டு அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த அலுவலகங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பார்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்றும் ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.