தில்லியில் தற்போதைக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் கரோனா பாதிப்பு குறித்து கூறியது:
"தில்லியில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 22 ஆயிரம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பாதிப்புகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. ஆனால், அச்சம்கொள்ளத் தேவையில்லை.
கடந்தாண்டு ஏப்ரல்-மே மாதத்தில் இரண்டாம் அலையின்போது 20 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது 341 பேர் உயிரிழந்தனர். ஆனால், நேற்றும் 20 ஆயிரம் பாதிப்புகள் பதிவானபோதிலும், 7 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க | நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கரோனா
அப்போது 20 ஆயிரம் படுக்கைகள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது 1,500 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படுத்துவதில்லை. அச்சம்கொள்ள வேண்டாம் என்பதற்காகத்தான் இந்தத் தரவுகளை வெளியிடுகிறோம். ஆனால், பொறுப்புடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.
தில்லியில் பொதுமுடக்கம் அமல்படுத்த எண்ணவில்லை. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றினால், பொதுமுடக்கம் அமலுக்கு வராது. தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் தேவையில்லை.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்" என்றார் அவர்.