உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் சந்தீப் சிங் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவும் மாா்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதனால் உத்தரப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் பேரனும், மாநில கல்வித்துறை இணையமைச்சருமான சந்தீப் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தேர்தல் குறித்து பேசிய அவர், 'உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெறும். வரவுள்ள தேர்தலில் போட்டியிடுவதன் மூலமாக மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய தாத்தா கல்யாண் சிங் இப்போது நம்முடன் இல்லை. அவரது வழிகாட்டுதலின்படி நான் பணியாற்றுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
உ.பி.யில் '73 அட்ராலி' தொகுதியில் சந்தீப் சிங் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.