மகாராஷ்டிரத்தில் பாஜகவை அடிமட்டத்தில் இருந்து மேல்நிலைக்கு கொண்டுவந்தது சிவசேனைதான் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத், 'மகாராஷ்டிரத்தில் பாஜகவை அடிமட்டத்தில் இருந்து மேலே கொண்டு சென்றோம். பாபருக்குப் பிறகு, வட இந்தியாவில் சிவசேனா அலைதான் இருந்தது; அப்போது நாங்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், எங்களுடைய கட்சி தான் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், அதை பாஜகவினருக்காக விட்டுவிட்டோம். இந்துத்துவாவை அதிகாரத்திற்காக மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது' என்றார்.
முன்னதாக, மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, 'நாங்கள் பாஜகவுடன் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தோம். பாஜக ஆட்சியைக் கைப்பற்றவே இந்துத்துவாவைப் பயன்படுத்தியது. பாஜகவை விட்டு வெளியேறிவிட்டோம். ஆனால், இந்துத்துவா கொள்கையை விடமாட்டோம். பாஜக இந்துத்துவா அல்ல. நாங்கள் சவால்விட்ட போது எங்களுக்கு எதிரான உத்திகளை அவர்கள் பயன்படுத்தினர்' என்றார்.
'மதத்தால் பெருமைகொள்வது நல்லதுதான். ஆனால், பிற மதத்தினர் மீது வெறுப்புகொள்வது சரியல்ல. பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள், அவர்களால் படிப்படியாக அழிந்துபோனது உண்மை' என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்கும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பிறகு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து சிவசேனை, மகாராஷ்டிரத்தில் ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.