"அயோத்தி முஸ்லிம்கள் வளர்ச்சியை விரும்புகின்றனர்'
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கைத் தொடர்ந்தவர்களின் மகனும் இவ்வழக்கில் தனி மனுதாரருமான இக்பால் அன்சாரி, பிடிஐ செய்தியாளரிடம் கூறியது:
அயோத்தியில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தில் தரமான சாலைகள், பூங்காக்கள், தொழிற்சாலைகள் ஆகியவை இடம்பெற வேண்டும். இங்கு ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. தற்போது மேலும் ஒன்று (ராமர் கோயில்) கட்டப்படுகிறது. இப்போது எங்கள் இளைஞர்கள் வேலைவாய்ப்பை விரும்புகின்றனர். அயோத்தி தற்போது புதிய மாவட்டமாக மாறியுள்ளதால் வளர்ச்சி அவசியமாகிறது.
கோயில்-மசூதி விவகாரம் தற்போது இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முஸ்லிம்கள் ஏதும் கூறவில்லை. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். தற்போது வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி குறித்து பேச வேண்டிய தருணம் இது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டுக்குரியவர். மாநிலத்தை கலவரங்களில் இருந்து விடுவித்து அவர் பல ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கலவரம் ஏதும் நிகழவில்லை என்றார்.
ராமஜென்மபூமி காவல் நிலையம் அருகே வசித்து வருபவரும் ராமர் கோயில் வழக்கில் மனுதாரருமான ஹாஜி மெஹ்பூப் (76) கூறுகையில், "மாநில அரசு என்ன கூறினாலும் சரி, இம்முறை ஆட்சி மாற்றம் நிச்சயம். அயோத்தியில் உள்ள அரசியல் சூழலைப் பொருத்தவரை சமாஜவாதி கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்று விரும்பும் சாமானிய மக்கள் தொடர்புடைய அனைத்துப் பிரச்னைகளையும் அக்கட்சித் தலைவர் எழுப்பியுள்ளார்' என்றார்.
அயோத்தியின் ரத் ஹவேலி சாலையைச் சேர்ந்த ஹமீத் ஜாஃபர் மிஸாம் என்பவர் கூறுகையில் "கரோனா தொற்று காரணமாக நடுத்தர மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களைக் கருத்தில்கொண்டு அரசு ஏதும் செய்யவில்லை. நடுத்தர மக்கள் மின் கட்டணத்தையும், கடன் தவணைகளையும் செலுத்திக் கொôண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கணிசமான நிவாரணம் வழங்கப்படவில்லை. கரோனா மட்டுமின்றி மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களாலும் மக்கள் இறந்தனர். மருத்துவமனைகளில் புறநோயாளிகளின் பிரிவுகள் மூடப்பட்டன. முன்னேற்றம் ஏற்படுவதற்கு நமக்கு வேலைவாய்ப்புகளும் மருத்துவ வசதிகளும் தேவை.
முதல்வர் ஆதித்யநாத் ஆரம்பத்தில் அயோத்தியில் ஆர்வம் காட்டினாலும் இத்தொகுதியில் போட்டியிடவில்லை. அவர்களது கட்சி நடத்திய உள்வட்ட ஆய்வைத் தொடர்ந்து அவர் இங்கிருந்து தப்பியோடி விட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு பாஜக அரசு வழிவகுக்கவில்லை. மாறாக, கோயில் கட்டுவதற்கு வழிவகுக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்' என்று தெரிவித்தார்.
அயோத்தியின் கங்கி கலி மசூதி அருகே வசிப்பவரான காலிக் அகமது கான் என்பவர் கூறுகையில் "முஸ்லிம்கள் எப்போதுமே மதச்சார்பற்ற சக்திகளுக்கே வாக்களித்து வந்துள்ளனர். அவர்கள் மதவாதக் கட்சிகளை ஆதரிக்க மாட்டார்கள். ராமர் கோயில் விவகாரம் இப்போது முடிந்து போன விஷயமாகும். அரசியல் கட்சிகளும் அந்த விவகாரத்தைக் கடந்து, மக்கள் தொடர்புடைய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...