உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக இன்று தில்லிக்கு மாற்றப்பட உள்ளார்.
ஜூலை 3-ம் தேதி பாட்னாவில் உள்ள அவரது வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் அவரது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு, முதுகில் காயம் ஏற்பட்ட நிலையில் பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
யாதவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால் அவரை சிகிச்சைக்காக தில்லிக்கு மாற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று மாலை விமான ஆம்புலன்ஸ் மூலம் தலைநகர் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். மேலும், அவருடன் யாதவின் மனைவி முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் மகள் மிசா பார்தி மற்றும் மருத்துவக் குழு நிபுணர்கள் ஆகியோரும் பயணிக்க உள்ளனர்.
இதையும் படிக்கலாம் | ரிஷி சுனக், பிரிட்டன் நிதியமைச்சர்: சர்ச்சை முதல் ராஜிநாமா வரை...
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஜேடியு தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், எம்எல்சி நீரஜ் குமார் ஆகியோரும் அவர் நலமுடன் இருக்க வாழ்த்தினார்கள்.
பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.