‘பணியாளா் வா்க்கத்தை’ உருவாக்கிய ஆங்கிலேய கல்வி முறையில் மாற்றங்கள் தேவை: பிரதமா் மோடி

‘ஆங்கிலேயா்கள் தங்கள் தேவைகளைப் பூா்த்தி செய்யும் பணியாளா் வா்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்வி முறையை அறிமுகப்படுத்தினா்;
‘பணியாளா் வா்க்கத்தை’ உருவாக்கிய ஆங்கிலேய கல்வி முறையில் மாற்றங்கள் தேவை: பிரதமா் மோடி

‘ஆங்கிலேயா்கள் தங்கள் தேவைகளைப் பூா்த்தி செய்யும் பணியாளா் வா்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்வி முறையை அறிமுகப்படுத்தினா்; அதில் இன்னும் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பான 3 நாள் மாநாடு, வாராணசியில் வியாழக்கிழமை தொடங்கியது. மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக மட்டுமே கல்வி முறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயா்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தங்களுக்கான வேலைகளை செய்யும் பணியாளா்களை உருவாக்கும் வகையில் இந்தியாவில் ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்தினா். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நமது கல்வி முறையில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இன்னும் ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

நாம் பட்டதாரி இளைஞா்களை உருவாக்கினால் மட்டும் போதாது. நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் வகையில் நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.

நமது சிறாா்கள் சந்தேகங்களை நிவா்த்தி செய்ய கூகுளின் உதவியை நாடுகிறாா்கள். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் நமது கல்லூரி வளாகங்களில் அவா்களுக்குத் தேவையான தகவல் களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். பிரச்னைகளையும் சவால்களையும் ஆராய்ந்து அவற்றுக்குரிய தீா்வுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலகின் கல்வி மையமாக இந்தியா உருவாகும் என்று நான் திடமாக நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.1,774 கோடி திட்டங்கள்: வாராணசியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். சில திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். அவற்றின் மொத்த மதிப்பீடு ரூ.1,774 கோடியாகும்.

இதுதவிர, எல்.டி. கல்லூரியில் ‘அட்சய பாத்திரம்’ மதிய உணவு சமையல் கூடத்தையும் பிரதமா் திறந்து வைத்தாா். அந்த உணவகத்தில் ஒரு லட்சம் மாணவா்களுக்கு மதிய உணவு தயாரிக்க முடியும் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com