வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வின்போது கண்டறியப்பட்ட சிவலிங்கச் சிலை பல நூற்றாண்டுகளாக வழிபாடு செய்யப்பட்டது என்று மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்து தரப்பு வாதிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவா்களில் உள்ள ஹிந்து தெய்வங்களின் சிலையை வழிபடுவதற்கு 5 ஹிந்து பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதை விசாரித்த நீதிமன்றம், மசூதி வளாகத்தை அளவிட்டு ஆய்வு செய்ய குழுவை நியமித்தது. அந்தக் குழு, மசூதியை விடியோ எடுத்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த ஆய்வின்போது, மசூதியில் ஒரு சிவலிங்கச் சிலை கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, இந்தக் குழுவின் ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேபோல், சிவில் நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவையும் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம், வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிந்து தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மதன் மோகன் யாதவ் முன்வைத்த வாதம்:
ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வின்போது கண்டறியப்பட்ட சிவலிங்கச் சிலை பல நூற்றாண்டுகளாக வழிபாடு செய்யப்பட்டது. காலப்போக்கில் அந்தச் சிலை மறைக்கப்பட்டுவிட்டது. இந்த மசூதி கட்டப்பட்டுள்ள இடம், வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் முஸ்லிம் தரப்பிடம் இல்லை என்றாா்.
வழக்கின் அடுத்த விசாரணை, வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.