நாட்டில் குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்துள்ளாா்.
கேரளத்தில் இருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் குரங்கு அம்மை பரவல் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘நாட்டில் குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் இருந்து அந்நோய் இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்காக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.