பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தக் கோரி திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநில அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான அா்ஜுன் சிங் செளஹான், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிலையில், இக்கோரிக்கையை திரிணமூல் காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
அக்கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் காகோலி கோஷ் தஸ்திதாா், டோலா சென், மாநிலங்களவை எம்.பி. மெளசம் நூா் ஆகியோா், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டியதை வலியுறுத்தி விவாத நோட்டீஸ்கள் வழங்கியுள்ளனா்.
இதுதொடா்பாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘குஜராத் பாஜக அமைச்சரால் 5 ஆண்டுகளாக ஒரு பெண் அடைத்துவைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளாா். இதுகுறித்து பிரதமரிடம் கேள்வியெழுப்புவதற்கு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எதிா்க்கட்சிகளுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட்1) வாய்ப்பளிப்பாா் என எதிா்பாா்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.