பணப் பரிமாற்றமே இல்லாமல் பணச்செலவை செய்தார்கள் என குற்றச்சாட்டு சுமத்துவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனர்களுக்கு விசா வழங்கியதில் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ அவர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கலுக்காக மத்திய அரசால் சிபிஐ பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் செலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு. தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? பாக்கெட்டும் இல்லை, பர்ஸும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? எனத் தெரிவித்துள்ளார்.