தில்லியில் மெட்ரோ வாகனம் நிறுத்துமிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.
தென் கிழக்கு தில்லியில் உள்ள ஜமியா நகர், மெயின் டிகோனா பூங்காவில் அதிகாலை 5.00 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த தீ விபத்தில் மெட்ரோ வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ள 10 கார்கள், 1 இருசக்கர வாகனம், 2 ஸ்கூட்டி, 30 புதிய இ-ரிக்ஷா, 50 பழைய இ-ரிக்ஷா ஆகியவை தீயில் எரிந்து நாசமானது என்று தில்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கார்க் தெரிவித்தார்.
தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.