ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் முதல்வா் பதவி வகிக்கும் நிலையில், அந்த மாநில தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு கல்குவாரியை அவா் குத்தகைக்கு எடுத்ததாக ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டிருந்தாா். அரசு ஆதாயமுள்ள குத்தகை பெற்றது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதியிழப்புக்கு உரியதாகும். அதன் அடிப்படையில், எம்எல்ஏ பதவியிலிருந்து ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது குறித்து அரசமைப்புச் சட்டப் பிரிவு 192-இன் கீழ் தோ்தல் ஆணையத்திடம் மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் கருத்து கோரியுள்ளாா்.