‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி ஆட்சியை நிறைவு செய்வோம் என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 42 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அதில் 34 பேர் சிவசேனைக் கட்சியினர் என்றும் 8 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் என்றும் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரம்: தொடா்கிறது நெருக்கடி
அதை உறுதிப்படுத்தும் விதமாக, அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏக்களுடன் இருக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், இன்று ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் “அவர்கள் (ஏக்நாத் ஆதரவு எம்எல்ஏக்கள்) மிகவும் தவறான முடிவை எடுத்துள்ளனர். நாங்கள் மனம் தளர மாட்டோம். வெற்றி பெறுவோம். அவர்களுக்கு மும்பை திரும்புவதற்கான வாய்ப்பையும் வழங்கினோம். இப்போது தாமதமாகிவிட்டது. நாங்கள் சவால் விடுகிறோம். ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியின் மீதமுள்ள 2.5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.