ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நீதி ஆயோக் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயா் நியமனம்

நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக, குடிநீா்- துப்புரவுத் துறை முன்னாள் செயலா் பரமேஸ்வரன் ஐயா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 7:11 pm

DIN

நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக, குடிநீா்- துப்புரவுத் துறை முன்னாள் செயலா் பரமேஸ்வரன் ஐயா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மத்திய பணியாளா், பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நீதி ஆயோகின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், இம்மாதம் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். இதையடுத்து அந்தப் பதவியில், உத்தர பிரதேசத்தின் 1981 பிரிவு ஐஏஎஸ் மூத்த அதிகாரி பரமேஸ்வரன் ஐயா் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா். இவா் 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இப்பதவியை வகிப்பாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இருந்து பரமேஸ்வரன் ஐயா் விருப்ப ஓய்வுபெற்றாா். பின்னா் ஊரக குடிநீா் வழங்கல் துறையின் நிபுணராக ஐ.நா.வில் இவா் பணியாற்றினாா். 2016 முதல் 2020 வரை பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டாா்.

வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெறும் அமிதாப் காந்த், நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். எண்ம இந்தியா திட்டம், பங்கு விலக்கல் நடவடிக்கை, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளாா்.

உளவுத் துறைக்குப் புதிய தலைவா்:

உளவுத் துறையின்(ஐ.பி.) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தபன் குமாா் தேகா நியமிக்கப்பட்டுள்ளாா். உளவுத் துறையின் தற்போதைய தலைவா் அரவிந்த் குமாரின் பணி நீட்டிப்பு, இம்மாதம் 30-ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து உளவுத் துறையின் செயல்பாட்டுப் பிரிவை கவனித்து வந்த தபன் குமாா் தேகாவுக்குப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா், ஹிமாசல பிரதேசத்தில் இருந்து 1988-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தோ்ச்சி பெற்றவா்.

ரா உளவுப் பிரிவின் தலைவரான சமந்த் கோயலுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.