உண்மையான ஒரு குரலை அடக்கினால் ஆயிரம் குரல்கள் எழும் என்று பத்திரிகையாளர் முகம்மது ஸுபைர் கைது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகக் கூறி தனியார் பத்திரிக்கை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது ஸுபைர் நேற்று இரவு தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாஜகவின் வெறுப்பு, மதவெறி மற்றும் பொய்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபரும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் பேரை எழுப்பும். கொடுங்கோன்மை மீது சத்தியம் எப்போதும் வெற்றி பெறும்' என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் பத்திரிகையாளர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவும் பொய் வழக்கில் முகம்மது ஸுபைர் கைது செய்யப்பட்டுள்ளதாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுர் சர்மாவின் விடியோவைப் பகிர்ந்து அதற்கு எதிராக பேசியதற்காக முகம்மது ஸுபைர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்