புது தில்லி: புது தில்லியில், துப்பாக்கி முனையில், கார் ஓட்டுநரை மிரட்டி, காரைக் கடத்திச் சென்ற கும்பலை, காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போதுதான், அவர்கள் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்று தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில், தில்லியின் ரங்கபுரியைச் சேர்ந்த சச்சின் (29), மனோஜ் (27) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர்களைப் போல காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி, கார் ஓட்டுநரை மிரட்டி, காரைக் கடத்திச் செல்வது இவர்களது வழக்கம் என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கார் ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரில், முனிர்காவிலிருந்து ரங்கபுரிக்கு இரண்டு பேர் காரை வாடகைக்கு எடுத்ததாகவும், வழியில், தன்னைத் தாக்கி துப்பாக்கி முனையில் காரை கடத்திச் சென்றதாகவும் கூறியிருந்தார்.
இவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவலர்கள், குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பதை கண்டறிந்துள்ளனர்.