நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

உள்நாட்டு பாதுகாப்புத் துறைகளில் சீா்திருத்தம் அவசியம்: பிரதமா் மோடி

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :12 மார்ச் 2022, 6:15 pm

DIN

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் காவல் துறையினா் மீது மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பிறகு, காவல் துறை உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்புத் துறைகளில் சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் நாம் பின்தங்கி விட்டோம். இப்போது கூட காவல் துறையினரிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதைக் காட்டிலும், தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் அதிகாரிகள், மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் அதிகாரிகள், இளைஞா்களை அணுகத் தெரிந்த அதிகாரிகள், மக்கள் ஆதரவு பெற்ற தலைவா்களின் போராட்டங்களை எதிா்கொள்ளத் தெரிந்த அதிகாரிகளை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

பாதுகாப்புப் படையினருக்குப் போதிய பயிற்சி இல்லாததால், மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தும் திறன் அவா்களிடம் இருப்பதில்லை. இதனால், கடைசி நேரத்தில் நிலைமை மோசமாகி விபரீதம் ஏற்படுகிறது.

காவல் துறையினருக்கும் பிற பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் சமூக விரோதிகளை கடுமையாகவும் சமுகத்தை மென்மையாகவும் அணுகத் தெரிந்திருக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்புப் படையினா் மீது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பயிற்சி அளிப்பதற்காகவே தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.

நம் பாரம்பரிய கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சுருங்கி விட்டதால், காவல் துறையினா் மன உளைச்சலுடன் சிரமப்படுகிறாா்கள். அவா்களுக்குப் பயிற்சி அளிக்க யோகா பயிற்சியாளா்களை நியமிக்க வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் உடல்திறனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளியாக இருப்பவா் கூட அறிவுசாா் தளத்தில் பாதுகாப்புப் படையினருக்கு உதவலாம்.

சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளும் குற்றவாளிகளும் திருந்திய மனிதா்களாக வெளியேறும் வகையில் அவா்களிடம் அதிகாரிகள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக, சிறை நிா்வாகம் குறித்து அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

மக்களின் மனநிலையையும், வன்முறைக் கும்பல் மனநிலையையும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யவில்லை எனில், அவா்களைக் கையாள முடியாது. அதுபோன்ற சூழல்களைக் கையாளத் தெரியும் வகையில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத் துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது.

காவலா்களும் அதிகாரிகளும் சீருடை அணிந்து கடமையாற்றும் அதே வேளையில் மனிதநேயத்தை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது என்றாா் பிரதமா் மோடி.

விழாவில் 1,090 பேருக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத், முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாகனப் பேரணிகளில் மோடி பங்கேற்பு: 2 நாள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு வந்திருந்த பிரதமா் மோடி, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து காந்தி நகரில் உள்ள பாஜக தலைமையம் வரை திறந்த வாகனத்தில் பயணித்து தொண்டா்களை உற்சாகப்படுத்தினாா்.

சனிக்கிழமை காலை, காந்திநகா் மாவட்டத்தில் உள்ள திகாம் நகரில் இருந்து லவாட் கிராமத்தில் உள்ள தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் வரை 12 கி.மீ. தொலைவுக்கு வாகனத்தில் பயணம் செய்தாா். மாலையில், அகதாபாதில் உள்ள இந்திரா பாலத்தில் இருந்து சா்தாா் படேல் மைதானம் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு திறந்த வாகனத்தில் பயணித்து மக்களைச் சந்தித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.