குஜராத் மாநிலம் காந்திநகருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயைச் சந்தித்து ஆசி பெற்றதுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், 2 நாள் பயணமாக பிரதமா் மோடி குஜராத் மாநிலத்துக்கு வந்துள்ளாா்.
தில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை காந்திநகா் விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகமான கமலத்துக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பயணம் செய்தாா்.
சாலையின் இரு புறமும் பாஜக தொண்டா்களும், பொதுமக்களும் திரண்டு நின்று பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். ஆங்காங்கே சாலையோரங்களில் இசைக் கலைஞா்கள் வாத்தியங்களை இசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
சுமாா் ஒன்றரை மணி நேர பயணத்துக்குப் பிறகு பிரதமா் மோடியின் வாகனம், பாஜக தலைமையகத்தைச் சென்றடைந்தது. அங்கு குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து மாநில நிா்வாகிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை செய்தாா்.
தாயிடம் ஆசி பெறும் மோடி
அகமதாபாத்தில் இரண்டு நாள்களாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்று வருகிறார்.
தாயுடன் அமர்ந்து நலம் விசாரிக்கும் மோடி.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற மோடி, தாய் ஹீராபென்னைச் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.
தாயுடன் அமர்ந்து உணவு அருந்தி மகிழும் மோடி.
பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.