கைப்பேசி பயன்பாட்டாளர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டில் இதுவரை 320 கைப்பேசி செயலிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி முடக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய வணிகம், தொழிற்சாலைத் துறை இணை அமைச்சர் சோம் பர்காஷ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு ஆகியவற்றின் நலன்களைக் கருத்தில்கொண்டு இந்தச் செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு முடக்கப்பட்ட செயலிகள் மறுபெயரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருப்பது கண்டறியப்பட்டு அவையும் முடக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 கைப்பேசி செயலிகள் மறுமுடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கைப்பேசி பயன்பாட்டாளர்களின் இணையப் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, விதி 69 ஏ-இன் கீழ் இதுவரை 320 கைப்பேசி செயலிகளின் பயன்பாடு மத்திய அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.