கரோனா தாக்கத்திலிருந்து மீளும் வகையில் ஏழைகளுக்கு மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கும் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
அதன்படி வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
கரோனா பாதிப்பைத் தொடா்ந்து 2020-ஆம் ஆண்டு நாட்டில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுமாா் 80 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த கால நீட்டிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இலவச திட்டத்துக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.2.6 லட்சம் கோடி செலவழித்துள்ளது. தற்போது 6 மாத கால திட்ட நீட்டிப்புக்கு கூடுதலாக ரூ.80,000 கோடி செலவாகும் என அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச உணவு தானியம் வழங்கும் இந்த திட்டத்தை மேலும் 6 மாத காலத்துக்கு ஆறாம் கட்டமாக மத்திய அமைச்சரவை நீட்டித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட திட்ட நீடிப்புக்கு மட்டும் 244 லட்சம் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்க உள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,003 லட்சம் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.