மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வு எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயதுவரம்பு தொடர்பாக தற்போதுள்ள விதிமுறைகளை மாற்றுவதற்கு சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும், புவி அறிவியல் இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமான பதிலில், கீழ்வரும் தகவல்களை அளித்துள்ளார்.
* கரோனா பெருந்தொற்றின் காரணமாக , ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது தொடர்பாக கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
* ரிட் மனுக்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கும் அந்த கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மாற்றுவது சாத்தியமாகவில்லை.
மேலும் இது தொடர்பான மற்றொரு விவகாரத்தில் பதிலளித்த ஜிதேந்திர சிங், அப்ஜெக்டிவ் வகைத் தேர்வைப் பொறுத்தவரை தேர்வின் முழு செயல்முறைக்குப் பின்னரே பதில்கள் அறிவிக்கப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அதன் ஆண்டு அறிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக நியாயமான காலக்கெடுவிற்குள் முடிவுகளை வெளியிடுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விடைத்தாள்களை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளதாக ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.