புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டட தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது, 12 பேர் காயமடைந்தனர். காணாமல் போன பலரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி கட்டடத்தை முதல்வர் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய தீ விபத்து என்றும், உடல்கள் கருகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கேஜரிவால் கூறினார்.
இதையும் படிக்க | கோதுமை ஏற்றுமதிக்கு தடை: - காரணம் என்ன?