காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்கள் ஆகியோருடன் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், கட்சியைப் பலப்படுத்துவது, அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கும் 'சிந்தன் ஷிவிர்' எனும் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கூட்டத்தின் முதல் நாளில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைத்திருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், கட்சியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (சனிக்கிழமை) கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்கள் ஆகியோருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக, இந்த மூன்று நாள் கூட்டத்தில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக நியமிப்பது தொடர்பாக வலியுறுத்தப்படும் என்ற பேச்சுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.