ரூ.3.12 கோடி அபராதம்.. இல்லையேல்: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ்

இந்திய பங்கு பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியம், தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா
Updated on
1 min read

புது தில்லி: பங்கு வர்த்தகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், ரூ.3.12 கோடியை அபராதமாக செலுத்துமாறு, இந்திய பங்கு பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியம் (செபி), தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் 15 நாள்களுக்குள் இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், சித்ரா ராமகிருஷ்ணாவுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்கு பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியம் (செபி) விதித்த அபராதத் தொகையை சித்ரா ராமகிருஷ்ணா செலுத்தத் தவறியதையடுத்து இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணா தற்போது தில்லியில் உள்ள திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் (என்எஸ்இ) நிா்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தாா். அப்போது என்எஸ்இ அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குச்சந்தைத் தரகா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கோ-லொகேஷன் வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தை பங்குச்சந்தைத் தரகா்கள் தொடா்புகொண்டு பங்கு விவரங்களை முன்கூட்டியே அறிந்து முறைகேட்டில் ஈடுபட்டனா். இந்த முறைகேடு வாயிலாக பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த மாா்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இந்த வழக்கில் நடைபெற்ற பணமோசடி தொடா்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்குடன் தொடா்புள்ள சில பங்குச்சந்தை தரகா்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

என்எஸ்இ வழக்கில் நடைபெற்ற பணமோசடிகள், விதிமுறைகளைப் பின்பற்றாமல் என்எஸ்இ-யில் தலைமை உத்தி ஆலோசகராக, குழு செயல்பாட்டு அதிகாரியாக, சித்ராவின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததில் நடைபெற்ற நிா்வாகக் குளறுபடிகள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்குத் தொடா்பாக ஆனந்த் சுப்ரமணியனும் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com