காந்தி நகர்: அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் உறவினர்களுக்கு தேர்தல் போட்டியிட வாய்ப்பு கிடையாது என கட்சி தீர்மானத்துள்ளதாக மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பரூச் தொகுதி பாஜக எம்.பி. மன்சுக் வசவா கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து மேலும் பாஜக எம்.பி.க்கள் மற்று எம்.எல்.ஏ.க்களும் தேர்தலில் உறவினர்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் செய்த்தியாளர்களிடம் கூறியதாவது: பேரவைத் தேர்தலில் "தற்போதைய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் உறவினர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை என கட்சி முடிவு செய்துள்ளது" என பாட்டீல் கூறினார்.
இதையும் படிக்க | மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த நபர், வைரலாகும் விடியோ
கடந்த வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தேர்தல் குழு கூட்டத்தில், மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கும், தொகுதிக்கு 3 வெற்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பளிக்க கட்சி முடிவு செய்துள்ளது.
கூட்டத்தின் கடைசி நாளான சனிக்கிழமை, 77 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பாஜக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடமிருந்து கருத்துகளை பெறும் வகையில், ‘குஜராத்துக்கு முன்னுரிமை’ என்ற பிரசாரத்தையும் பாஜக சனிக்கிழமை தொடங்கியது.
இதன்படி, மக்கள் தங்கள் கருத்துகளை பொது இடங்களில் வைக்கப்படும் ஆலோசனைப் பெட்டிகள் மற்றும் agresargujart.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தெரிவிக்கலாம். நவம்பர் 15 ஆம் தேதி வரை ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என பாஜக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஹிமான்ஷு வியாஸ் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார். வியாஸை பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தவே வரவேற்றார்.