
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வெள்ளிக்கிழமை இன்று (நவ.18) இணைந்தார்.
இதன் மூலம், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் இணைந்துள்ளதாக சமூல வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
தலைமுறைகள் கடந்து இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் இணைந்து ஒன்றாகப் பேரணி சென்றது வரலாற்று நிகழ்வு என காங்கிரஸ் கட்சி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை குறிவைத்து, பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மகாராஷ்டிரத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இன்று (நவ.18) காலை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது.
நடைப்பயணம் தொடங்கிய சிலமணி நேரத்தில், எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ஷெகான் பகுதியில் ராகுல் காந்தியின் பேரணியில் கலந்துக்கொண்டார்.
நான் பிறந்த ஊரில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொள்வது மகிழ்ச்சி என துஷார் காந்தி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் ஒற்றுமைப்பயணத்தில் ஒன்றாக கலந்துகொண்டது வரலாற்று நிகழ்வு என காங்கிரஸ் கட்சி சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.