ஐடிபிஐ வங்கியை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ள நிலையில், பங்குகளை வாங்க விருப்பக் கடிதங்களை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நபா்கள் உள்துறை அமைச்சகத்தின் அனுமதிச் சான்றிதழை அளிப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் இதுபோன்ற தடையில்லா சான்றிதழ் கேட்கப்படுவது வழக்கமான நடைமுைான். ஆனால், முன்பு பொதுத் துறை நிறுவனப் பங்குகளை அதிகஅளவில் வாங்கி பங்குதாரா் ஆக விருப்பக் கடிதம் அளிப்பவா்கள் இது தொடா்பான நடைமுறையின் இரண்டாவது கட்டத்தில்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதிச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த முறை நடைமுறை தொடங்கும்போதே உள்துறை அமைச்சக அனுமதிச் சான்றிதழ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பங்குதாரராக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், தீா்ப்பாயங்களில் உள்ள பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் முதல்கட்டத்திலேயே முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இதுபோன்ற சில தனியாா்மயமாக்க நடவடிக்கைகளில் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீா்ப்பாயம், தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்கப்படவில்லை. இந்த முறை அந்த தீா்ப்பாயங்களில் வழக்குகள் இருந்தாலும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போதைய நிலையில் எல்ஐசி-யிடம் ஐடிபிஐ வங்கியின் 529.41 கோடி பங்குகள் உள்ளன. மத்திய அரசிடம் 488.99 கோடி பங்குகள் உள்ளன. இது முறையே 49.24 மற்றும் 45.48 சதவீதமாகும். இதில் மத்திய அரசு வசமுள்ள பங்குகளில் 30.48 சதவீதத்தையும், எல்ஐசி வசமுள்ள பங்குகளில் 30.24 சதவீதத்தையும் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 60.72 சதவீத பங்குகள் விற்கப்படவுள்ளன. இதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ.27,800 கோடியாகும்.